ஆணவம் அகங்காரம் பெருமை கொள்ளும் மனிதர்களுக்கு!

ஆணவம் அகங்காரம் பெருமை கொள்ளும் மனிதர்களுக்கு! இன்றைய உலகில் தனது பணத்தாலும், பதவியாலும், பெற்ற படிப்பாலும், பிறந்த குடும்பத்தாலும் பெருமையடிக்கும் பலரை நாம் நமது அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம். இது பலரையும் பீடித்திருக்கும் ஒரு வியாதி என்றால் மிகையில்லை. ஒரு ஏழை தனது மகனின் திருமணத்துக்கு வற்புறுத்தி கூப்பிட்டாலும் அதற்கு செல்லாத சிலர் ஒரு பணக்காரன் அளிக்கும் ஆடம்பர மார்க்கம் அனுமதிக்காத விருந்துகளுக்கு வலிந்து செல்வதை பார்க்கிறோம். அதே போல் தனக்கு நண்பனாக வருபவன் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் பலரையும் பார்க்கிறோம். இவை எல்லாம் உலக மக்களின் சாதாரண எதிர்பார்ப்புகளாக உள்ளது. இவை எல்லாம் தவறு என்பதை ஏனோ நன்கு விபரம் அறிந்த பலரும் உணருவதில்லை. ஆணவம், அகங்காரம், பெருமையடிப்பது பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம். 'நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று நபிகள் நாயகம் கேட்டு விட்டு 'பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே' என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு நூல் புகாரி 4918, 6072,6657) 'நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர் சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது.' என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டனர். (அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு, நூல்: முஸ்லிம் 5109) 'ஒரு மனிதன் ஒரு கவள உணவை உட்கொண்டு இறைவனைப் புகழும் போதும், ஒரு மிடறு தண்ணீரை அருந்தி விட்டு அதற்காக இறைவனைப் புகழும் போதும் இறைவன் அந்த மனிதன் விஷயத்தில் திருப்திப்படுகிறான்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: நபித்தோழர் அனஸ், நூல் முஸ்லிம் 4915) இது போன்று சிறிய விஷயங்களில் கூட நாம் இறைவனை நினைவு கூறுவதால் நமக்குள் மறைந்திருக்கும் ஆணவமும் அகங்காரமும் சிறிது சிறிதாக விலகும்.. இறைவனைப் புகழ்வதால் இறைவனுடைய தகுதி நம்மால் உயர்ந்து விடப் போவதில்லை. இதன் மூலம் நமது தகுதியை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாமே உயர்த்திக் கொள்கிறோம். மிகச் சிறந்த அறிவாளியாக இருப்பான். பல மொழிகள் பல கலைகள் கற்றிருப்பான். ஆனால் சம்பாததியம் என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளுமபடியாக இருக்காது. அதே நேரம் எழுதப் படிக்க தெரியாத ஒரு கை நாட்டு பேர் வழி தொட்டதெல்லாம் பொன்னாகும். இங்கு அறிவு அவனுக்கு உதவி புரியவில்லை. இறைவன் யாருக்கு எவ்வளவு என்று நாடுகிறானோ அதுவே கிடைக்கும். இதனால் நாம் முயற்சி செய்வதில் எந்த குறையும் வைக்கக் கூடாது. நாமும் முயற்சி செய்ய வேண்டும். அதற்காக எது கிடைத்தாலும் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று திருப்தியுறும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு முன்னேற்றமும் நம்மால் ஆனது அல்ல. இறைவன் நம் மீது கொண்ட கருணையினாலேயே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் ஆணவம், அகங்காரம், பெருமை என்று அனைத்துமே நம்மை விட்டு அகன்று விடும். அத்தகைய நன் மக்களாக என்னையும் உங்களையும் இறைவன் ஆக்கி அருள் புரிவானாக! இப்படிக்கு M.MOHAMED IBRAHIM JANNAH M.J

Comments

Post a Comment

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை